அந்தியூர் கால்நடை சந்தை: காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-10-25 02:30 GMT

அந்தியூர் மாட்டு சந்தை.

அந்தியூர் கால்நடை சந்தை வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு ஈரோடு, பர்கூர், மேட்டூர், பண்ணவாடி, மேச்சேரி மற்றும் கர்நாடக மாநிலம் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்திற்கும் விலை போனது.

சிந்து பசு மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், பர்கூர் இன பசுமாடு ஜோடி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்துச் சென்றனர். அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதால் கால்நடைகள் கடந்த வாரத்தை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

Tags:    

Similar News