நிரம்பி வழியும் வரட்டுப்பள்ளம் அணை: அணைக்கு செல்ல தடை விதிப்பு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால், அணைக்கு செல்லும் நுழைவாயில் அடைப்பு.

Update: 2021-11-22 11:00 GMT

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணை 35.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைப்பகுதியில் தேக்கி வைக்கப்படும் நீரானது கோடை காலங்களில் வன விலங்குகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் ரம்மியமான அழகு காட்சிகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிலர் அணை பகுதிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி நீர் மட்டம் உயர்ந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதை யொட்டி பொதுமக்கள் அணை பகுதிக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. நுழைவு வாயில் கதவு அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்த ஒரு சிலர் ஏமாற்றம் அடைந்தனர். வரட்டுபள்ளம் அணைக்கு செல்ல கடந்த 4 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அணைக்கு பொது மக்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News