2026ல் அதிமுக ஆட்சி அமையும்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

2026ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2024-04-06 00:45 GMT

ஈரோடு கஸ்பாபேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி.

2026ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரித்து ஈரோடு அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, அவர் பேசியதாவது:-

மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற கட்சி அதிமுக. மீண்டும் அதிமுக மலர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதிமுகவில் தான் அடிமட்ட தொண்டனும் உச்சபட்ச பதவிக்கு வரலாம். 10 ஆண்டு கால அதிமுகவில் கொண்டு வந்த திட்டங்களை மேடையில் நாங்களும் பேசுகிறோம். நீங்கள் 3 ஆண்டுகால சாதனையை விளக்க மேடைக்கு வாருங்கள் என அழைப்பு ஸ்டாலினுக்கு விடுத்தும் இதுவரை பேச்சு மூச்சு இல்லை. திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டு மாநாடு மூலம் வந்த தொழிற்சாலைகள் எதுவென்று தெரியவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை தரவில்லை.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து முதியோரை குறிவைத்து தாக்கி நகை கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. இதுவரை குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும். எனவே உங்கள் உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் எங்களிடம் வேண்டாம். அதிமுகவை முடக்க அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். இதற்கு எல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பதில் சொல்லனும். அதிமுக தொண்டன் ஒருவனை கூட திமுகவினர் தொட கூட முடியாது. தமிழகத்தில் 3 ஆண்டுகளில் குட்டி சுவராக்கி உள்ளனர். இந்திய கூட்டணி பல்வேறு மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ளனர்.

ஒருமித்த கருத்து தேர்தலில் போட்டியிடும் போது இல்லாத போது எப்படி ஒற்றுமையாக பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். இந்திய கூட்டணிக்கு யார் பிரதமர் என கூற முடியுமா?. பிரதமர் வேட்பாளர் யார் என கூறாமல் பல மாநில கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றால் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை பெற முடியும். மாநிலத்திற்கு தேவையான உரிமை பெற வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய, மாநில அரசுகள் மக்களை பார்க்கவில்லை. எனவே மக்கள் தகுந்த பாடம் புகுந்த வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஈரோடு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி 10 சதவீத பணிகள் தான் பாக்கி இருந்தது.அரசியலுக்காக முடக்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ராமலிங்கம், ராமசாமி, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவசுப்பிரமணி, தென்னரசு, நடராஜ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் மயில் என்கிற சுப்பிரமணி, கதிர்வேல், செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News