ஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி, ஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Update: 2023-09-01 03:30 GMT

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி புறப்பட தயாராக இருந்த பேருந்துகள்.

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின்போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த வாரம் விடுமுறை நாட்களில் திருமண விழாக்களும் நடக்கவிருப்பதால் பலர் வெளியூர் செல்ல வேண்டியதிருக்கும். இதனால்  பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அந்த வகையில் இந்த வாரஇறுதி நாட்களை கருத்தில் கொண்டு 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து ஈரோடு மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News