கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-21 14:15 GMT

நிஷாந்த்.

ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மகன் நிஷாந்த் (25). எம்பிஏ படித்துள்ளார். நிஷாந்தின் அக்கா கார்த்திகாவுக்கு திருமணமாகி சத்தியமங்கலம் தேள்கரடு வீதியில் வசித்து வருகிறார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு நிஷாந்த் சத்தியமங்கலத்தில் உள்ள தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு நிஷாந்த் மட்டும் குளிக்க சென்றார். கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் படித்துறை என்ற இடத்தில் நிஷாந்த் குளித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை. இதையடுத்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய நிஷாந்தை தேடினர். இதை தொடர்ந்து நிஷாந்தை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News