ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 564 மனுக்கள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 564 கோரிக்கை மனுக்களை பெற்று, ரூ.1.04 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.;
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிவதையும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிவதையும் படத்தில் காணலாம்
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 564 கோரிக்கை மனுக்களை பெற்று, ரூ.1.04 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (23ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில், வீட்டுமனை பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 564 மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து, கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் 5 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், 3 நபர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கல்வி நிதியுதவியும், ஒரு நபருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரணம் நிதியுதவியும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.