டி.என்.பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி தி்ட்ட பணிகளை ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

Update: 2024-10-08 12:30 GMT

தூக்க நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் (டி.என்.பாளையம்) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமுகை மற்றும் அரக்கன்கோட்டை ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (8ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெருமுகை ஊராட்சி கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை அவர் நேரில் பார்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் தற்போது உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, கல்ராமணி பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.94.50 லட்சம் மதிப்பீட்டில் 27 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், எரங்காட்டூர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கரும்பாறை பகுதியில் 12 பழங்குடியினருக்கான வீடுகளும், பகவதிநகர் பகுதியில் 28 பழங்குடியினருக்கான வீடுகளும் என 40 வீடுகள் தலா ரூ.4.37 லட்சம் வீதம் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அதனைத் தொடர்ந்து, அரக்கன்கோட்டை ஊராட்சி அரக்கன்கோட்டை கிராமத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 4 வீடுகள் புனரமைப்பு செய்யும் பணியினையும் என ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின்போது, தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, இந்திராணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News