ஈரோட்டில் பட்டியல் இனத்தினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம்

ஈரோட்டில் பட்டியல் இனத்தினர் பழங்குடியினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

Update: 2023-05-30 14:20 GMT

பட்டியல் இனத்தினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் வாகையர் (சாம்பியன்) திட்டத்தின் கீழ், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 35% மூலதன மானியத்துடன் கூடிய கடன் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா  தெரிவித்ததாவது:- அண்ணல் அம்பேத்கர் தொழில் சாம்பியன் திட்டம் (Anmal Ambedkar Business Champions Scheme) 2023-2024 ஆம் ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 65% வங்கி கடனாகவும், 35% அரசின் மும்முனை மானியமாகவும் (அதிகபட்ச மானியம் ரூ. 1.5 கோடி) மற்றும் வங்கி கடன் வட்டியில் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும் மற்றும் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன் பெற வயது வரம்பு 18 முதல் 55 க்குள்ளாக இருத்தல் வேண்டும். கல்வி தகுதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்கள் துவங்கலாம். உதாரணமாக, வாகனங்களை முதன்மையாக கொண்டு செய்யக்கூடிய டாக்ஸி, சரக்கு வாகனங்கள், JCB, கான்கிரீட் இயந்திரம், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், மெக்கானிக் செட், உணவகம், புகைப்படம் எடுத்தல், டெய்லரிங், எம்ப்ராயிடரி, இன்ஜினியரிங் வொர்க்ஸ், வெல்டிங் வொர்க்ஸ் போன்ற சேவை தொழில்களும், பாக்குமட்டை தட்டு தயாரித்தல், தறி அமைத்தல், கயிறு தயாரித்தல் போன்ற உற்பத்தி தொழில்களும் மற்றும் வியாபாரம் தொடங்கவும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

மேலும், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். தன்னுடைய சுய முதலீட்டில் தொழில் தொடங்கினாலும் இத்திட்டத்தில் மூலம் முதலீட்டு மானியம் (பின்னீட்டுமானியமாக) பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சென்னிமலை ரோடு, ஈரோடு - (0424-2275283) மற்றும் திட்ட மேலாளர் (8925533947) ஆகியோரை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், டி.ஐ.சி.சி.ஐ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மருதப்பன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் ஜெகன்ராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கார்த்திகேயன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News