ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது 2வது வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது 2வது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-22 09:15 GMT

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழக்குப்பதிவை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்காலின் போது அனுமதி பெறாமல் ஊர்வலமாக வந்து தொடர்பாக ஏற்கெனவே அவர் மீது தேர்தல் பிரிவு அலுவலர்கள் புகார் படி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அவர் மீது 2வது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மரப்பாலம் பகுதியில் மேனகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர் .அப்போது அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக சீமான் பேசியது குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால் இரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் தங்கள் பகுதியில் ஓட்டு சேகரிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினரை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.


அதைத்தொடர்ந்து அதே பகுதியில் வேறு வீதியில் வீடு வீடாகச் சென்று நாம் தமிழர் கட்சியினர் நோட்டீஸ் விநியோகித்து ஓட்டு சேகரித்தனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின்படி வேட்பாளர் மேனகா உள்பட 30 பேர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணனிடம் வழக்குப்பதிவை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தார்.

Tags:    

Similar News