ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247 மனுக்கள் வரப்பெற்றன.;
நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம 247 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர், (சமூக பாதுகாப்பு திட்டம்) தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டர் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், பதிவு பெற்ற திருமதி.பேபி என்ற பதிவு பெற்ற பெண் ஓட்டுநருக்கு புதிதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதற்காக ரூ.1 லட்சம் மானியம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜ கோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல் அலுவலர் கோதைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.