சித்தோடு அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!
சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.;
இருசக்கர வாகன விபத்து (கோப்பு படம் -கார்ட்டூன்)
சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிவைடர் மற்றும் அடையாளம் தெரியாத வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம், கொத்தமங்கலம், கருங்குளம், நெல்லி மட்டம், புதுப்பாளையம் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மானு முனியப்பன் (வயது 25). இவரது நண்பர் கேரள மாநிலம், இன்சார் குளிப்பிலி, ஒலிக்காலைச் சேர்ந்த சேவியர் மகன் ஹனி சேவியர் (வயது 25). இவர்கள் இருவரும் விசாலக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோடு டிவைடர் மீது மோதி கோவை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீதும் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சித்தோடு போலீசார் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.