ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 110 மனுக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-09-27 13:30 GMT

விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட  ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (27ம் தேதி) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 26.09.2024 முடிய 384.82 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 89.65 அடியாகவும், 21.31 மி.கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 87 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 39 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 16 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 43 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


இரசாயன உரங்களான யூரியா 6652 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 1399 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1827 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 11695 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

2024-25-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.

இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.

மேலும், பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவுசங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் (eKYC) மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென தெரிவித்தார்.

தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றம் விவசாயிகள், எல்.பீ.பி வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயம் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு நீர் எடுப்பதை தடை செய்ய வேண்டும், பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய வேண்டும்.

ஆகாயத்தாமரைகளை அகற்றுதல், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 110 கோரிக்கை மனுக்களை பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகர், துணை இயக்குநர் (தோட்டக்கலை) மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) மகாதேவன், செயலாளர்/துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம், வருவாய்துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News