நத்தம் வந்தடைந்த நகரத்தார் காவடி: பக்தர்கள் பரவசம்

Murugan Devotees Padayatra 400 வருட பாரம்பரிய நகரத்தார் காவடிகள் நத்தம் வந்தடைந்தது. பழனி தைப்பூச விழாவை காண நகரத்தார்கள் வைரவேலுடன் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகனை காண பாதயாத்திரை மேற்கொண்டனர்.

Update: 2024-01-21 08:54 GMT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வந்தடைந்த நகரத்தார் காவடிகள்.

Murugan Devotees Padayatra

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வாணியர் காவடி மடத்திற்கு இன்று காலை பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வைரவேலுடன் வந்து சேர்ந்தன. 331 சர்க்கரை காவடிகள் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று குன்றக்குடியில் இருந்து தொடங்கி நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசித்து காவடி செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்பின், நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.

கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது தங்களது பயணங்களை தொடர்ந்து வருகின்றனர்.ஜனவரி 25 தை பூசத்தினத்தன்று பழனி சென்றடைந்து, அதன் பின் ஜனவரி 27 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.

நத்தம் வாணியர் காவடி மடத்தில் இன்று காலை வேலுக்கு பானக பூஜை, மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் பால் , மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில், நத்தம் சுற்றுவட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கி புறப்பட்டார்கள்.

இக்காவடிகளுக்கு நத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களால் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சர்க்கரை காவடியுடன் புறப்பட்ட முருக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பழனியை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும்.

Tags:    

Similar News