தொடர் மழை காரணமாக ஆலாபுரம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக வாணியாறு உபரிநீர் திறக்கப்பட்டதன் காரணமாக ஆலாபுரம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Update: 2021-11-04 17:30 GMT

நீர் நிரம்பி காணப்படும் ஆலாபுரம் ஏரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த ஆலாபுரம்  ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவை கொண்ட மிக்க பெரிய ஏரி. இந்த ஏரிக்கு வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த ஏரியை மூலம் ஜீவா நகர், மேட்டூர் காடு, ஆலாபுரம், மெணசி, பூதந்த்தம், மருக்காலம்பட்டி, கள்ளியூர், நடூர், அம்மாபாளையம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும்  ஏரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர், உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி புதூர் ஏரிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக ஆலாபுரம் ஏரிக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்பொழுது ஏரி நிரம்பி கோடி எடுத்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரி கோடியில் தண்ணீர் வெளியேறுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகறது.

இந்த தண்ணீர் அருகில் உள்ள ஓந்தியம்பட்டி ஏரிக்கு செல்கிறது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் பெய்த மழையில் இந்த ஆலாபுரம் ஏரி நிரம்பியது. தொடர்ந்து இந்தாண்டு ஒரு மாதம் முன்னதாகவே ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News