வாணியாறு அணை அருகே ஒரு மணி நேரம் தோகை விரித்தாடிய அழகு மயில்

வாணியாறு அணை அருகே கருமேகம் சூழ்ந்த வேளையில் சுமார் ஒரு மணி நேரமாக மயில் தோகை விரித்தாடியது.

Update: 2021-10-10 14:45 GMT

வாணியாறு அணை அருகே சுமார் ஒரு மணி நேரமாக தோகை விரித்தாடிய  மயில்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக தினந்தோறும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை சேர்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஏற்காடு மலையில் தினமும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வாணியாறு அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் இந்த பகுதியில் எப்பொழுதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

தொடர்ந்து இன்று காலை முதலே வாணியாறு அணை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வாணியாறு அணை பகுதியில் இரண்டு மயில்கள் இரை தேடி சுற்றித் திரிந்து வந்தது. அப்போது கருமேகம் சூழ்ந்து மழை பொழியும் சீதோஷ்ண நிலை மாறிய போது, அங்கிருந்த மயில் தோகையை விரித்து ஆடியது.

கருமேகம் சூழ்ந்து வந்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மயில் தோகையை விரித்து உற்சாக கூவிக் கொண்டே (மயில் அகவும்) ஆடியது. வாணியாறு அணை பகுதியில் பார்ப்பதற்கு ரம்மியமாக அழகு மயில் தோகை விரித்தாடிய காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News