தற்காலிக தரைப்பாலம் மீது மழைநீர்: வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் அருகே தற்காலிக தரைப்பாலம் மீது மழைநீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்

Update: 2022-01-02 05:24 GMT

தண்ணீரில் மூழ்கியுள்ள தற்காலிக தரைப்பாலம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக, விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட தீவளூர் உப்புனோடை குறுகிய தரைப்பாலம் மீது மழைநீர் செல்கிறது.

இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட கிராம த்தைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புதியதாக மேம்பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இருந்த மேம்பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்துள்ளனர். பின்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக் காலங்களில் தற்காலிக தரைப் பாலத்தின் மீது மழைநீர் செல்வதால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாற்றுப்பாதையில் 20 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டியுள்ளது. 

எனவே அப்பகுதியில் மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News