வேப்பூர் சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூரில் நடந்த ஆட்டு சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Update: 2023-11-10 13:27 GMT

வேப்பூர் ஆட்டு சந்தை 

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய வெள்ளிக்கிழமை தோறும் வேப்பூரில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் வேப்பூரில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு ஆடுகளை திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று வழக்கத்தை விட விலை 500 முதல் ஆயிரம் வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலை 1 மணி முதல் 7 மணிக்குள் 6 மணி நேரத்துக்குள் சந்தை வளாகத்தில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

ரூ. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்து உள்ளதாக தெரிவித்தனர். அதிக விலைக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News