வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு..!

இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-04-14 05:45 GMT

வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் (கோப்பு படம்)

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற 47 வயதான நபர், நேற்று வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். அப்போது அவர் முதல் மலையில் உள்ள குரங்காட்டி பள்ளம் அருகில் சென்ற போது, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததை பார்த்த உடன் வந்தவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் அவரை வனத்துறையினர் சுமந்து மலை அடிவாரம் கொன்டுவந்தனர். மலை அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் சோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டு தோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேறக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News