நேதாஜி, அம்பேத்கர் வேடம் அணிந்த கலைஞர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேடமணிந்தவர்களுடன் வந்ததாக தெரிவித்தார்.

Update: 2022-02-04 08:30 GMT

தலைவர்கள் வேடமணிந்த கலைஞர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஆளும் கட்சி, எதிர்கட்சி வேட்பாளர்கள் ஒருபுறம் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுயேட்சைகளும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட போத்தனூர் 95வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் ராஜசேகர் என்பவர், நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ண வேடம் அணிந்த கலைஞர்களுடன் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த சம்பவம் அங்கு இருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சமூக ஆர்வலரும், விலங்கு உயிரியல் ஆர்வலருமான ராஜசேகர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு தந்தும், அமராவதி வனப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு கோவையிலிருந்து லாரிகளில் பழங்களை ஏற்றி சென்று உணவாக தந்தும் பசியாற்றினார். அடிப்படையில் நடன கலைஞரான இவர் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளார். நேதாஜி, அண்ணா, அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகள் மக்கள் மறந்து வருகின்றனரென்றும், தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லவும், அவர்களின் வழியில் அரசியலில் ஈடுபடவும் சேவை செய்யவும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளதாக கூறும் ராஜசேகர், தேர்தலில் வெற்றி பெற்றால் அடிப்படை தேவைகளையும், பெண்களுக்கான திட்டங்களையும் தருவேன் என தெரிவித்திருக்கிறார்.

Tags:    

Similar News