இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள் அஞ்சலி

மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-09 14:30 GMT

பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னால் சென்ற காவல்துறை வாகனம் ஒன்று பர்லியார் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 5 போலீசார் லேசான காயம் அடைந்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி வழியாக சூலூர் விமானப்படை விமான நிலையத்திற்குச் சென்றது. இதனிடையே மேட்டுப்பாளையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்புலன்ஸ் மீது ஒரு ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து உடனடியாக இராணுவத்தினர் அந்த விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்து உடலை வேறு ஒரு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றனர்.

மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் ராணுவ அதிகாரிகளின் உடல்களை கொண்டு சென்ற வாகனங்கள் மீது பொதுமக்கள் மலர்தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படுகாயமடைந்த வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags:    

Similar News