சிறு, குறு தொழில்துறையை மீட்டெடுப்பதே தமிழக அரசின் நோக்கம்: தங்கம் தென்னரசு

தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த பலனடையும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Update: 2021-09-21 08:45 GMT

அமைச்சர் தங்கம் தென்னரசு.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தொழில்துறை மேம்பாட்டு தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கொரோனா பெருந்தொற்றால் நாடு எப்போதும் இல்லாத வகையில் சவால்களை சந்தித்து வருவதாகவும், புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

காலம் காலமாக பாரம்பரிய தொழிலில் உள்ளவர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் தொழில்துறை முன் உள்ளதாகவும், தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் தான் வருவதாகவும் தெரிவித்தார். தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த பலனடையும் என்று தெரிவித்தார்.

நீண்ட கால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் , தமிழக வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் இந்த அரசு முனைப்பாக உள்ளதாகவும் அதன் அடிப்படையில் வரலாற்று பாரம்பரியத்தில் குறைவில்லாத கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாகவும் இந்த அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News