கோவை மாநகராட்சி மேயரை முதல்வர் தேர்வு செய்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சி மேயர் யார் என்பதை முதல்வர் முடிவு செய்வார் என திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்

Update: 2022-02-26 04:30 GMT

திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவை காளப்பட்டி பகுதியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. குடிநீர், சாக்கடை, சாலை வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இதில், எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் என கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான பணிகள் திட்டமிடுதல் எடுத்துகொள்ளப்பட உள்ளது.

முதல்வரிடம் சிறப்பு நிதிகள் பெறப்பட்டு பணிகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றியை செலுத்த உள்ளோம். அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு வர உள்ள நிதிகள் வேறு பணிக்கு பயன்படுத்தப்பட்டது. தூய்மையான நிர்வாகத்தை வழங்க உள்ளோம்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

கோவை மாநகராட்சி மேயரை முதலமைச்சர் முடிவு செய்வார். 234 கோடி வளர்ச்சி திட்டங்களுக்காக தனது தொகுதியாக நினைத்து முதல்வர் கோவைக்கு வழங்கியுள்ளார். முதல்வரின் பிறந்தநாளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி முயற்சிகள் எடுக்கப்படவில்லை. முதல்வரின் ஆலோசனையின் பேரில் மாவட்டந்தோறும் மின் பூங்கா வைக்க திட்டமிடப்பட்டுள்ளது் முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

Tags:    

Similar News