கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்: 15 ஒப்பந்த மருத்துவர்கள் நியமனம்
கோவை கொடிசியா வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது.;
கோவை கொடிசியா வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
கோவையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட 15 மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமன ஆணைகளை , அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, 4 அரங்குகளில் 1286 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 400 படுக்கைகளுக்கு கான்சன்ட்ரேட்டர்கள் மூலம் ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கொடிசியா வளாகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஒப்பந்த அடிப்படையில் 75 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 15 மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணி ஆணையையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.