வால்பாறை படகு இல்லத்தில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரம்
ஆகாயத்தாமரை படர்ந்திருப்பதால் படகுகளை அதிக தூரம் செலுத்த முடியாததால் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது;
ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் நீண்ட நாள் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
படகு இல்லத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. நகராட்சி ஊழியர்கள் பணி நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு படகு சவாரிக்கு 40 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி விடுமுறை நாள் என்பதால் அதிகமாக பொது மக்கள் வந்து சென்று உள்ளனர்.
படகு இல்லத்தின் ஒரு பகுதியில் ஆகாயத்தாமரைகள் இருப்பதால் தண்ணீர் மாசு அடைந்து இருப்பதாகவும் படகுகளை அதிக தூரத்திற்கு செலுத்த முடியாமல் உள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று வால்பாறை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் தலைமையில் படகு இல்லத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்தது. தாமரை செடிகளை படகுகள் மூலமாக வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.