கோவை காரமடை பகுதியில் 510 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை காரமடை பகுதியில் 510 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-24 07:31 GMT

கோவை காரமடை அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களுடன் போலீசார் உள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள மளிகைக்கடையில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் விரைந்து சென்ற காரமடை காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் காரமடையில் உள்ள ராம்தேவ் ஜெனரல் ஸ்டோர் என்ற பெயரில் மளிகைக்கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தஜாராமை(28) காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் காரமடையை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கஜேந்திரன் என்பவரது தோட்டத்து வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தஜாராம்(28) மற்றும் அவரது மளிகைக்கடையில் பணிபுரியும் தத்ராம்(24),கேத்ராம்(22) உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 510 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

காரமடை வட்டாரத்தில் 510 கிலோ அளவிற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளது/

Tags:    

Similar News