பவானி ஆற்றில் வெள்ளம் - காத்தையாற்று பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு

பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால், மேட்டுப்பாளையன் காந்தையாற்று பாலம் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-22 16:13 GMT

நீரில் மூழ்கிய காத்தையாறு பாலம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காந்தவயல் மற்றும் லிங்காபுரம் கிராமங்களுக்கு இடையே ஓடும் காத்தையாற்றின் குறுக்கே, 2004 ம் ஆண்டு இருபது அடி உயரம் மற்றும் இருநூறு அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் கட்டப்பட்டுள்ள இப்பாலம், அணையின் நீர் மட்ட உயரம் 95 அடியை கடந்தாலே நீருக்குள் மூழ்க துவங்கி விடும்.

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக, மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்யும் மழை காரணமாக. அணையின் நீர் ஆதாரமாக விளங்கும் பவானியாறு, காந்தையாறு, மாயாறு, கல்லாறு போன்றவற்றில் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்ட உயரமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 96 அடியை கடந்த நிலையில் காத்தையாற்று பாலம் மூழ்க துவங்கி விட்டது.

பாலத்தின் மீது தற்போது ஒரு அடிக்கும் மேலாக வெள்ளம் செல்கிறது. பாலத்தை இணைக்கும் இணைப்பு சாலைகளும் நீருக்கடியில் சென்று விட்டது. இதனால் காந்தவயல், ஆளூர், உளியூர், காந்தையூர் என நான்கு கிராம மக்கள் பாலத்தின் வழியே நகர பகுதிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இப்பாலம் ஒட்டு மொத்தமாக இருந்த இடம் தெரியாமல் தண்ணீருக்கடியில் சென்று விடும், போக்குவரத்தும் முற்றிலுமாக தடைபட்டு விடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விரைவில் பாலத்தை உயர்த்தி கட்ட, அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News