மேளம் முழங்க, மாலையுடன் வந்து சாலைக்கு மரியாதை: ஏன் தெரியுமா?

கோவையில், பழுதடைந்த சாலைக்கு மலர் வளையம் வைத்து‌ வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-01-10 13:45 GMT

பழுதான சாலையை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் செய்தனர். 

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால்,   காந்திபுரம் பகுதியில் இருந்து துடியலூர் செல்லும் கனரக வாகனங்கள், கணபதி, மணியகாரம்பாளையம் வழியாக மாற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே,  மணியகாரம்பாளையம் முதல்,  நஞ்சே கவுண்டன்புதூர் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி,  நஞ்சே கவுண்டன்புதூர் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில், இன்று  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாலை மற்றும் மலர் வளையங்கள் மேளதாளங்கள் முழங்க பேரணியாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து சாலைக்கு மாலை அணிவித்தும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். அப்போது சாலையை உடனடியாக சீரமைத்து தர நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உட்பட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News