தோட்டாக்களுடன் விமான நிலையம் வந்த பயணி- கோவையில் பரபரப்பு
கோவையில், 5 துப்பாக்கி தோட்டாக்களுடன் விமான நிலையத்திற்கு வந்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.;
கோவை விமான நிலையத்தில், டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம், பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது வந்த ஒரு பயணியின் உடமையை சோதித்தபோது, 5 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பயணியிடம் வீரர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்த விஜேயேந்திரகுமார் என்பதும், தனியார் நிறுவனத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியினை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், துப்பாக்கிக்கான உரிய ஆவணங்கள் இருப்பதாகவும், சொந்த ஊர் செல்லும் அவசரத்தில் துப்பாக்கி தோட்டாக்களை மறந்து எடுத்து வந்ததாகவும், அவர் தெரிவித்தார். எனினும், துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்த சிஐஎஸ்எப் வீரர்கள், பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.