கொரோனா சிகிச்சை மையத்தில் உணவு, குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி

நோயாளிகளுக்கு முறையாக உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-08 10:30 GMT

கொடிசியாவில் உணவிற்காக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்

கோவையில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகள் மட்டுமின்றி, 33 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆலோபதி மற்றும் சித்தா ஆகிய முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

676 சாதாரண படுக்கைகளில், 588 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 88 படுக்கைகள் காலியாக உள்ளன. 353 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 274 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 79 படுக்கைகள் காலியாக உள்ளன. இதேபோல சித்தா பிரிவில் உள்ள 100 படுக்கைகளில் 36 நிரம்பியுள்ள நிலையில், 64 படுக்கைகள் காலியாக உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு முறையாக உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்திற்கு அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதில்லை எனவும், இதனால் பலரும் பட்டினியாக கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு அரங்கத்தில் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனில், 200 பேருக்கு தான் உணவு வருகிறது எனவும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது எனவும் நோயாளிகள் தெரிவித்தனர். குடிநீர் வசதி கூட இல்லை எனக்கூறிய அவர்கள், முறையாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News