கோவையில் தனியார் கல்லூரி மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

Update: 2021-09-15 17:15 GMT

கோவை மாநகராட்சி அலுவலகம்

கோவை சரவணம்பட்டி அருகே தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் விடுதி உள்ளது. கல்லூரி செயல்பட துவங்கியதை அடுத்து, பிற மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவிகள் கல்லூரிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வந்து, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் மூலமாக கொரோனா நோய்த் தொற்று பரவியதாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 46 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்த மாணவிகளுக்கு சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வந்த மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுதியில் தங்க வைத்து, விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இதனிடையே அனைத்து கல்லூரி விடுதிகளிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்களை 10 நாட்கள் விடுதிகளில் தனிமைப்படுத்த வேண்டுமெனவும், மாணவ, மாணவிகளை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்லூரி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News