வேளாண் பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க மானியம்

வேளாண் தொழில்முனைவோராக்குதல் திட்டத்தின்கீழ் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தகவல்

Update: 2023-01-10 03:39 GMT

காட்சி படம் 

வேளாண் தொழில்முனைவோராக்குதல் திட்டத்தின்கீழ் வேளாண் பட்டப் படிப்பு பயின்ற இளைஞா்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் பயனடைந்த, தகுதியுடைய பயனாளிகளுக்கு வேளாண் சார்ந்த சுய தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு தேவையான தகுதிகள்

  • வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் ஆகிய பிரிவுகளில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும்.
  • 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராக இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.

வங்கி மூலம் கடன் பெறும் தொழில்முனைவோர் பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின்கீழ் சுயதொழில்கள் தொடங்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் உள்கட்டமைப்புக்கான செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சோ்க்கக் கூடாது.

இந்த திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:

  • பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள்,
  • பட்டப் படிப்பு சான்றிதழ்,
  • ஆதார் எண், குடும்ப அட்டை
  • சுயதொழில் தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடா்பான விரிவான திட்ட அறிக்கை,
  • வங்கிக் கணக்கு விவரம்

ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News