ஊராட்சி பணிகளுக்கு இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கு இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-05-28 04:16 GMT

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது

கூட்டமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு என்ற பிரபு தலைமை தாங்கினார். கௌரவதலைவர் காரச்சேரி கே.எம்.எஸ்.சுந்தர்ராஜ், செயலாளர் ஆனந்தி சண்முகம், பொருளாளர் சின்னு என்ற சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு இணைசெயலாளர் கோதவாடி ரத்தினசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி துணை ஆட்சியர் தலைமையில் கிணத்துக்கடவுவில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதில் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த துணை ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
  • ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கு இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று சொல்கிற தமிழக அரசு உள்ளாட்சியில் ஊராட்சி தலைவர்களுக்கு உள்ள அதிகாரத்தை குறைப்பது கண்டிக்கத்தக்கது,
  • கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் போல் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்.
  • திருச்சியில் வருகிற 2-ம் தேதி நடைபெறும் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
  • பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞரின் வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஊராட்சிகளில் வரி வசூல் செய்ய ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு பதிலாக மீண்டும் ரசீது முறையை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் குணசேகரன், சின்ராசு என்ற செந்தில்குமார், அபின்யாஅசோக்குமார், தர்மராஜ், சுரேஷ்குமார், விஜயசங்கர், ராம்குமார், விசாலாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News