கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண் உயிரிழப்பு

Coimbatore News Today: கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-04-06 06:44 GMT

பைல் படம்.

Coimbatore News Today: நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) அனுமதிக்கப்பட்டு, கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோயம்புத்தூர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " அந்த பெண் கொரோனா அறிகுறி தென்படுவதன் காரணமாக அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த பெண் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் பதிவான இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 82 வயது முதியவர் கடந்த திங்கள்கிழமை நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரைச் சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த முதியவர் கடந்த  திங்கள்கிழமை கோவையில் உள்ள கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. அன்றே அவர் உயிரிழந்தார்.  அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து,  அவரது 78 வயது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கோவையில் நேற்று 12 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆக உள்ளது.

Tags:    

Similar News