கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடி!

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-18 14:01 GMT

காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவுடி பார்த்தசாரதி.

கோவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து நிகழ்ந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், கொலைக்கு பிறகு கொலையாளிகள் அங்கிருந்து ஆயுதங்ளுடன் சவகாசமாக நடந்துச் சென்ற சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோகுல் கொலை வழக்கில் சிலரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், கோகுல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.

பார்த்தசாரதி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, கோவை பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான போலீஸார் ரவுடி பார்த்தசாரதி பிடிக்க சென்றனர். அப்போது, பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்ய முற்பட்டபோது அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார்.

காவல்துறையினரும் அவரை விரட்டி சென்ற நிலையில், ரத்தினபுரி அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து கீழே குதித்து பார்த்தசாரதி தப்ப முயன்றாராம். இதில், பார்த்தசாரதியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்த ரவுடி பார்த்தசாரதியை காவல்துறையினர் பிடித்து கைது செய்ததுடன் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பார்த்தசாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News