புதிய ரேஷன் கார்டு கேட்டு கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் புதிய ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் ஆர்வம்;

Update: 2023-11-15 12:03 GMT

ரேஷன் கார்டு (கோப்பு படம்)

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

மேலும் ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் புதிய ரேஷன்கார்டு வழங்கக்கோரி விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து இருப்பதால், அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வடிவில் ரேஷன்கார்டுகள் அச்சிட்டப்பட்டு தகுதியானவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

தமிழக அளவிலான ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் சென்னையில் மட்டுமே தயாராகி வருகிறது. தொடர்ந்து அவை மாவட்டந்தோறும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட குடிமைப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் பொதுமக்களில் பலர் ஆர்வத்துடன் புதிய கார்டுகள் வழங்க கோரி விண்ணப்பம் செய்து வருகின்றனர். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News