தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மைதான். ஆனால் நாளை முதல் வரத் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2021-06-08 13:36 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்த காட்சி.

கடந்த ஜூன் 3 தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று தென் சென்னையில் புதிதாக 250 கோடியில் உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் பொதுப்பணித் துறையை சேர்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்ரமணியன், தென் சென்னை மக்களின் நலனுக்காக கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் 250 கோடி ரூபாயில் பன்னோக்கு மருத்துவமனை அமைய உள்ளது. மொத்தமுள்ள 47 ஏக்கரில் 12.6 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான். ஜூன் மாதத்திற்கான 43 லட்சம் தடுப்பூசியில் 5.5 லட்சம் தடுப்பூசிகள் தான் இதுவரை வந்துள்ளன.  நாளை முதல் 13-ம் தேதி வரை 6.5 லட்சம் தடுப்பூசி வர உள்ளன. தடுப்பூசிக்காக மத்திய அரசிடம் 100 கோடி ரூபாய் வரை தமிழக அரசு செலுத்தியுள்ளது. 

குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு மத்திய அரசு மூலப்பொருட்கள் வழங்கினால் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் வரை தயாரிக்க முடியும் . இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும்பட்டத்தில் நாட்டில் 8வது தடுப்பூசி தயாரிப்பு மையமாக இது கருதப்படும் என்றார்.

தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு தடுப்பூசி போடப்படுவதாக வெளியான குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யும் விலையில் இருந்து 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News