சமூக ஊடகங்களில் பா.ம.க நிர்வாகிகளை விமர்சிக்கும் பா.ம.கவினர் மீது கடும் நடவடிக்கை : ராமதாசு அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பா.ம.க நிர்வாகிகளை விமர்சிக்கும் பா.ம.கவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-18 08:15 GMT

டாக்டர் ராமதாஸ் (பைல் படம்)

பாமக நிர்வாகிகளை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

பாட்டாளி மக்கள் கட்சி ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒரே குடும்பமாக பழகி வருபவர்கள் என்பதுதான் நாம் பெருமைப்படும் விஷயமாகும்.

அண்மை காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன்சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைதூக்கத் தொடங்கி உள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மேலும் பா.ம.க மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன்.

எனவே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகளை சேர்ந்த எவரும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொறுப்பாளர்கள் மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதை விடுத்து சமூக ஊடகங்களில் கட்சி பொறுப்பாளர்களை எதிராக பதிவிட்டால் அத்தகைய ஒழுங்கீன செயலில் ஈடுபடுபவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News