சென்னை: ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு! மர்மம்!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சாவில் மர்மம் இருப்பதாக கணவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2021-06-09 10:54 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை.

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் மவுலி. இவருடைய மனைவி சுதா.  இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக மவுலி சேர்த்தார். அங்கு 3-வது மாடியில் சுதா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மறுநாள் சுதாவைப் பார்க்க மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார் மவுலி. ஆனால், அப்போது 3-வது வார்டில் மனைவி சுதா இல்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் மவுலி, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். நிர்வாகத்தினர் சுதாவைத் தேடிப் பார்த்துவிட்டு காணவில்லை என்று கூறினர்.

அதனையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் மவுலி புகார் கொடுத்தார். அதன்பிறகும் அவரது மனைவியை கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்று ஏன் என் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மவுலி  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து மவுலியை அழைத்துக்கொண்டு, மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடினர். மருத்துவமனையின் 8-வது மாடியில் சுதாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதைப் பார்த்ததும் மவுலி கதறி அழுதார்.

புகார் கொடுத்த அன்றே தேடியிருந்தால், மனைவி உயிருடன் கிடைத்திருப்பார் என்று போலீசாரிடம் கதறினார். சுதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது கணவர் மவுலி குற்றம்சாட்டினார். உடனே, இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News