வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2021-12-10 10:45 GMT

வீட்டினுள் கலைந்து கிடந்த பொருட்கள். 

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முருகன் (55), இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான வந்தவாசிக்கு சென்றிருந்தார். இன்று மதியம் 1 மணியளவில் அவரது மகள் ஆண்டாள் என்பவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது,  5 சவரன் தங்க நகை, 1.5 லட்சம்  ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார்,  கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். தொடர்ச்சியாக பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News