வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று -மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு.

Update: 2021-06-16 11:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது. மேலும் 9 சிங்கங்களுக்கு பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ், சீனாவில் அதுவும் விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியதாக சொல்லப்பட்டு வருகிறது. அதனால்தான், இப்போதுவரை இந்த தொற்று விலங்குகளையும் விட்டு வைக்காமல், உயிரை வாரி சுருட்டி கொண்டு போய் வருகிறது.

நம் தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, கடந்த வருடமே அதிரடியாக மூடப்பட்டது.. பிறகு தொற்று பாதிப்பு குறைந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே வந்தன. சானிடைஸர் , மாஸ்க் அணிந்தே ஊழியர்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தனர். வண்டலூர் விலங்குகளுக்கு சாப்பாடு தருவதைகூட, சில அடி தூரம் நின்றபடியே தந்தனர். அனைத்துவிதமான பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்துதான் வேலை செய்தனர்.

அதனால், இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளினால் எந்தவித உயிரினங்களுக்கு ஏற்படாது என்றே நம்பப்பட்டது. ஆனால் வண்டலூர் பூங்காவில் கடந்த 3ஆம் தேதி ஒரு சிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்தது. அந்த சிங்கம் கொரோனா பாதித்து உயிரிழந்ததாக சந்தேகம் எற்பட்டது.

கடந்த வாரம் இந்த சிங்கத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது.. ஒருவேளை தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து, சிங்கத்தின் சடலத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

இதே போல் மேலும் 10 சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. இதனையடுத்து இந்த மாதிரிகளும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பான ரிப்போர்ட் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3-ம் தேதி இறந்த அந்த சிங்கம் கொரோனா பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்துள்ளது என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் உறுதி படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்தது நீலா என்கிற 9 வயதான பெண் சிங்கமாகும். இதேபோல் மேலும் 8 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மற்ற விலங்குகளுக்கும் தொற்று இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாஸ்க் அணிதல், அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் மற்றொறு பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் மூச்சுத்தினறல் காரணமாக உயிரிழந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இதுவரை உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News