உற்சாகம், ஆரோக்கியம் தரும் ஆதி முத்திரைகள்..!

ஆதி முத்திரை அனைத்து சுவாச பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவும்.

Update: 2024-02-10 12:00 GMT

ஆதி முத்திரை 

உடலுறுப்புகளில் கைகளுக்கு, அதிலும் கை விரல்களுக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. நம் கையில் நெருப்பு- கட்டை விரலாகவும், காற்று- ஆட்காட்டி விரலாகவும், ஆகாயம்- நடுவிரலாகவும், மண்- மோதிர விரலாகவும், நீர்- சுண்டு விரலாகவும் அமைந்துள்ளன. ஆக, பஞ்ச பூதங்களை அடக்கும் சக்தி நம் கைவிரல்களிலே உள்ளது.

தாயின் கருவறைக்குள் இருக்கும்போதே இம்முத்திரையை செய்யத் தொடங்கிவிடுகிறோம் என்பதால் இது ஆதி முத்திரை எனப்படுகிறது. குழந்தை பிறந்து சில நாட்கள் வரையிலும்கூட இம்முத்திரையைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எப்படிச் செய்வது: அமைதியான, வெளிச்சம் இல்லாத ஓர் அறையில் கண்களை மூடி, விரிப்பின் மீது சம்மணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும்படி நேராக அமர்ந்து, வெறும் வயிற்றுடன், இரு வேளையும் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

கட்டை விரலை மடக்கி, அதன் நுனியை சுண்டு விரலின் அடிமேட்டில் வைக்கவும். மீதமுள்ள நான்கு விரல்களால் கட்டை விரலைச் சுற்றிப் பிடித்து மடக்கவும். இதுவே ஆதி முத்திரை. இப்படியே பத்து நிமிடங்கள் வரை இருக்கவும். அதன் பிறகு, கையில் உள்ள ஆதி முத்திரையை விலக்காமல், ‘ம்ம்ம்’ என்ற ஒலியோடு மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இப்படியே ஒன்பது முறை செய்ய வேண்டும்.

ஆதி முத்திரையை இரண்டு கைகளிலும் பிடித்திருப்பது அவசியம்.

பலன்கள்: இறை உணர்வோடு கலந்து தியானத்தில் அமர, இந்த முத்திரை பயன்படும். ஐம்புலன்களுக் கான கதவுகளை அடைத்து, ஞானக் கண் திறக்க உதவும்.கருவறையில் இருக்கும் வரை சிசுவின் ஐம்புலன்களுக்கு வேலை இல்லை. கருவறையிலிருந்து வெளிவந்த பின்பு ஐம்புலன்களை நம்மால் அடக்க முடியாது. ஆதி முத்திரையைச் செய்யும்போது, இயல்பாகவே நமது ஐம்புலன்களும் அடங்கி, நமக்குத் தேவையான தவ நிலையின் நன்மைகளை அளிப்பதை உணரலாம்.

காரணமற்ற பயம், நடுக்கம், படபடப்பு, கவலை ஆகியவை நீங்கும். தலைக்கு ரத்த ஒட்டம் அதிகமாகி, மூளை சுறுசுறுப்படையும். அதிர்ஷ்டம் பெருகும். பத்து வித வாயுக்களில் மிக முக்கியமான உதான வாயுவை தூண்டச் செய்து, தவநிலையை மேம்படுத்தும்.

குழப்பம் மற்றும் வீண் சிந்தனைகள் விலகி, இறைபொருள் நமக்குள்ளே இருப்பது போன்ற உணர்வைப் பெற முடியும். உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும். உயிர் சக்தி பாதுகாக்கப் படுகின்றது. உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மன ஒருமைப்பாடு கிடைக்கும். சுறுசுறுப்பாக உற்சாகமாக திகழலாம். நல்ல எண்ணங்கள் உதயமாகும். தீய எண்ணங்கள் விலகும். நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.

முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும். தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும். எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

படிக்கின்ற மாணவர்கள் படிக்கும் பொழுது உடல் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் மீண்டும் சோர்வு நீங்கும். உற்சாகமாக படிக்கலாம். மேலும், நவகிரகங்களின் பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க இம் முத்திரையை நாள்தோறும் செய்து வரலாம். 

Tags:    

Similar News