பெரியபாளையத்தில் மழைநீர் செல்ல இணைப்பு கால்வாய் கட்டித்தர கோரிக்கை..!

பெரியபாளையத்தில் மழைநீர் செல்ல இணைப்பு கால்வாய் கட்டித்தர கோரிக்கை..!

கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் மழை நீர் வெளியேறமுடியாமல் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. 

பெரியபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் கட்டப்பட்ட கால்வாய்க்கு கூடுதல் இணைப்பு கால்வாய் கட்டி மழை நீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுளளது.

பெரியபாளையத்தில் மழை நீர் வடிகால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழிவகை செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 6. வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் நூறு குடும்பங்களை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் நீண்ட வருடங்களாக மழை நீர் கால்வாய் இல்லாத காரணத்தினால் மழை காலங்களில் மழைநீர் வெளியேற வலியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து தண்ணீர் வடிவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றன. இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்திய பின்னர் கடந்த 2021-22 நிதி ஆண்டில் ரூபாய் 12.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு மழை நீர் செல்ல வடிகால் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது கால்வாய் சாலை கடந்து ஆரணி ஆற்றுப்பகுதியில் இணைப்பு அமைத்து தண்ணீரை வெளியே செல்ல பணிகள் முழுமையாக முடியாத நிலையில் தற்போது அக்கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைய நீர் தேங்கி அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த கால்வாய் இணைப்பு அமைத்து தண்ணீரை வெளியேற அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் எங்கள் பகுதியில் வடிகால் கால்வாய் அமைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை. மழை நீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் வசிப்போரை கடிப்பதால் காய்ச்சல் போன்ற நோய்த் தாக்கம் ஏற்படுவதாகவும், இதுகுறித்து நாங்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கோரிக்கை வைத்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழை பெரிதாக பெய்வதற்கு முன்பு தண்ணீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story