பழவேற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
பழவேற்காடு அருகே கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.
HIGHLIGHTS
பழவேற்காடு அருகே கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த வடகிழக்கு பருவமழையின் போது கடப்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஆண்டார்மடம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. பின்னர் குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மீண்டும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்படாத காரணத்தினால் அவதியடைந்து வருவதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக பழவேற்காட்டு - பொன்னேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.