அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்..!

அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்..!

தச்சூர் கூட்டுச்சாலையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தச்சூரில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், பாஜக நமக்கு மிக பெரிய தொல்லை. பாஜக கூட்டணியால் தான் கடந்த எம்எல்ஏ தேர்தலில் தோல்வியடைந்தேன். அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆதங்கம். தற்போது தேர்தல் நடந்தால் கூட வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டுச்சாலையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிறுணியம் பலராமன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து பேசுகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக நமக்கு மிகப் பெரிய தொல்லை எனவும், பாஜவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததாகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாஜகவால் தம்மையும் புறக்கணித்து விட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.


பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற முடியவில்லை என்றும், ஜமாத்தில் பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்ததாகவும், அதே போல கிறிஸ்தவர்களும் சபையில் பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் கூறியதால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதால் இனி வரும் தேர்தல்களில் எளிதாக வெற்றி பெறலாம் என தெரிவித்தார். மேலும் தற்போது தேர்தல் நடந்தால் கூட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று விடுவேன் எனவும் அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags

Next Story