ஊரடங்கில் பால்விலையை உயர்த்தினால் கடையின் உரிமம் ரத்து:அமைச்சர் எச்சரிக்கை
ஊரடங்கின் போது பால் விலை உயர்த்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் எச்சரிக்கை
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் அத்யாவசிய தேவைகளான காய்கறிகளை அந்தந்த பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளுக்கு 47 காய்கறி வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் 1018 நடமாடும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தேவைப்பட்டால் வாகனங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
பால் தங்கு தடையின்றி கிடைக்க தனியாக வார் ரூம் செயல்பட்டு வருவதாகவும், பால் வினியோகம் தடைப்பட்டால் வார் ரூமுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனக் கூறினார். மேலும் ஊரடங்கை பயன்படுத்தி பால் விலை ஏற்றி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.