லாரி உரிமையாளருக்கு ரூ. 11.39 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் கோர்ட் உத்தரவு

வங்கி சேவை குறைபாட்டால், லாரி உரிமையாளருக்கு ரூ. 11.39 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே உள்ள கள்ளுக்காடு கிராமத்தில் வசிப்பவர் முகிலன் (41). இவர் நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள கார்ப்பரேட் வங்கி ஒன்றில் கடந்த 2017 டிசம்பரில் ரூபாய் 23 லட்சம் கடன் பெற்று லாரி ஒன்றை வாங்கினார். 59 மாதங்களுக்கு, மாத தவணை ரூ 48,400- வீதம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி 16 மாதங்கள், மாதாந்திர தவணை தொகையை பேங்கில் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் எவ்வித முன் அறிவிப்பும் கொடுக்காமல் லாரியை வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து கைப்பற்றிக் கொண்டது. சொந்த பணம் ரூபாய் 12 லட்சத்தையும், கடன் பெற்ற பணம் ரூபாய் 23 லட்சத்தையும் செலுத்தி, ரூ 35 லட்சத்தில் லாரியை வாங்கிய நிலையில், கடந்த 2021 ஜூன் மாதத்தில், சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் வங்கி நிர்வாகம் ரூ. 13,65,000-க்கு லாரியை விற்று விட்டது. லாரியை விற்ற பணம் போக மேலும், ரூ 11,39,786- வங்கிக்கு செலுத்துமாறு முகிலனுக்கு பேங்க் நோட்டீஸ் அனுப்பியது.
வங்கியின் சேவை குறைபாட்டிற்காக தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, முகிலன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். மாதாந்திர தவணைத் தொகைகளை சரிவர செலுத்தாததால் லாரியை ஒப்பந்தப்படி கைப்பற்றினோம் என்றும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி லாரியை விற்பனை செய்தோம் என்றும் வங்கியின் தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது. வங்கியின் வாதத்தை நிராகரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில், வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
குறைந்த விலையில் லாரியை ஏலத்தில் விற்பனை செய்ததற்கு ரூ 6,75,000- இழப்பீடாகவும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ 4,54,786- இழப்பீடாகவும், மொத்தம் ரூ 11,39,786ஐ 4 வார காலத்திற்குள் லாரி உரிமையாளருக்கு, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தொகையிலிருந்து வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து கொண்டு, வழக்கு தாக்கல் செய்தவர் வங்கிக்கு எவ்வித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்று சான்றிதழை வழங்குமாறும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu