தேர்தல் பயிற்சி முடிந்து டூ வீலரில் திரும்பிய ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழப்பு

Namakkal news- நாமக்கல் அருகே சாலை விபத்தில் ஆசிரியர் ஜெயபாலன் உயிரிழந்தார். (மாதிரி படம்)
Namakkal news, Namakkal news today- தேர்தல் பயிற்சி வகுப்பு முடிந்து டூ வீலரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (47). இவர் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு, வரும் லோக்சபா தேர்தலில், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், முதன்மை ஓட்டுச்சாவடி அலுவலராக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, சேந்தமங்கலம் அக்கியம்பட்டி தனியார் பள்ளியில், 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. அதில் பங்கேற்க ஜெயபாலன் தனது, டூ வீலரில் சென்றார். பயிற்சியை முடித்துவிட்டு, மாலை, 4.45 மணிக்கு நாமக்கல் நோக்கி டூ வீலரில் வந்து கொண்டிருந்தார். வேட்டாம்பாடி அருகே வந்தபோது, சேந்தமங்கலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக, அவரது டூ வீலரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில், தலையில் படுகாயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த, நாமக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜெயபாலனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த, நாமக்கல் கலெக்டர் உமா, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று, இறந்துபோன ஜெயபாலனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ஆசிரியர் ஜெயபாலன், சாலை விபத்தில் உயிரிழந்த காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி, சோசியல் மீடியாக்களில் வைலராகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu