மேல்நிலைப்பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்க கோரிக்கை
மேல்நிலைப்பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு.
மேல்நிலைப்பள்ளிகளுக்கு, காலாண்டுத் தேர்வு முடிந்த பிறகு 9 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் காலாண்டு தேர்வுக்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விட வேண்டும். மேலும், 1முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பது, போல 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் நடப்பு கல்வியாண்டில் ஜூன் 13 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ச்சியாக 4 மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில், 27ம் தேதியுடன் காலாண்டு தேர்வு நிறைவுபெறுகிறது. இந்த நிலையில் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை பற்றிய அறிவிப்பில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு, பள்ளி மீண்டும் அக்டோபர் 3ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது
வரும் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டால் மீதி 2 நாள் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் பள்ளி வேலை நாளில் நடைபெறக்கூடிய சூழல் உள்ளது. மேலும் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஆசிரியர்கள் மாணவர்களுடைய விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதும் அதனை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யக்கூடிய பணியும் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 7.10. 2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்காக மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் படிப்பதற்காகவும் விடுமுறை விட வேண்டும். மேலும் உளவியல் ரீதியாக ஆசிரியர்களுக்கும் சிறிது ஓய்வு வழங்கப்பட வேண்டும். எனவே கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் காலாண்டு தேர்வுக்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதைப் போல, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.