நாமக்கல் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர்கள் கைது

நாமக்கல் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர்கள் கைது
X

வெப்படை காவல் நிலையம் - கோப்புப்படம் 

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர்

வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 15 பேரை பள்ளிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் மயான முட்புதற்களில் போதை மாத்திரைகளும் ஒரு முறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக வெப்படை தனிப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் இரவு நேரங்களில் திரண்டு வந்து, தங்களுக்கு போதை வருவதற்காக மாத்திரையை நீரில் கரைத்து ஊசியாக தங்கள் நரம்புகளில் செலுத்திக் கொள்வது தெரிய வந்தது.

இந்த நிலையில், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (25), கட்டிட தொழிலாளி. இவர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது;

நானும் எனது நண்பர்களும் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தோம். தற்போது நான் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதில்லை. எனினும், எனது நண்பர்கள் என்னை போதை மாத்திரைகள் பயன்படுத்த வற்புறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சில இடங்களில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்துவது தெரியவந்தது. இம்மாத்திரையை போதைக்காக தண்ணீரில் கரைத்தும், ஊசி மூலம் உடலில் செலுத்தியும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. தவிர, இந்த மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி ரூ.200 முதல் 300 வரை ஒரு மாத்திரை விற்பனை செய்யப்பட்ட விவரமும் தெரியவந்தது.

இதையடுத்து இதுபோன்ற போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கிரிஹரண் (26), மாதவன் (18), தென்னரசு (18), சுஜித் (26), கலியனூர் கவுரிசங்கர் (21), தீபன் (21), நந்தகுமார் (19), பிரவீன் (18), ஈரோடு மாவட்டம் அந்தியூரரைச் சேர்ந்த விக்னேஷ் (24), ஈரோடு கருங்கல்பாளையம் கவுதம் குமார் (32), பள்ளிபாளையம் இலியாஸ் உல்லா (27), சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த சுஜித் (21), ராசிபுரத்தானூர் யுவராஜ் (24), மறவம்பாளையத்தான்காடு கவுதம் (23), பள்ளிபாளையம் லட்சுமணன் (22) ஆகிய 15 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான, போதைக்காக விற்பனை செய்யப்பட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன் கூறுகையில், இம்மாத்திரைகள் ஆன்லைனில் வாங்கப்பட்டுள்ளது. அதுபோல் குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை சப்ளை செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags

Next Story
how to bring ai in agriculture