அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை

ஆண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கொ.ம.தே.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யெலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 350க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகில் சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருதம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இந்த மதுபானக் கடைக்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவைக் குடித்துவிட்டு, காலி பாட்டிலை பள்ளி வளாகத்துக்குள் வீசி எறிகின்றனர். இதனால் பாட்டிகள் உடைந்து மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நடமாட முடியாத அவல நிலையில் உள்ளது. குடிமகன்களின் நடமாட்டத்தால், பள்ளிக்கும் வரும் மாணவர்கள் அச்சத்துடன் வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் கலக்கத்துடன் பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளதால், மாணவ மாணவிகள் சுதந்திரமாகவும் அச்சம் இன்றியும் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட எல்லையில், மருதம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மார்க் மதுக் கடையால் பாதிக்கப்படும், நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu